Jan 24, 2014

தெரிந்த செய்திகள் தெரியாத உண்மைகள்

 
பள்ளிவாசல்களில் அமர்ந்து உலக விஷயங்களைப் பேசக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பள்ளியில் பேசினால் நாற்பது ஆண்டு கால நன்மைகள் அல்லது தொழுகைகள் அழிந்து விடும் என நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாக ஒரு செய்தியை பல பள்ளிவாசல்களில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.
 
அதிகமான மக்களும் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாகவே இன்றளவும் நம்பியுள்ளனர். உண்மையில் இவ்வாறு ஹதீஸ் உள்ளதா? இதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொள்வோம்.
الحديث في المسجد يأكل الحسنات كما تأكل البهائم الحشيش
 
கால்நடைகள் புற்பூண்டுகளைத் திண்பதைப் போன்று பள்ளிவாசல்களில் பேசுவது நன்மைகளைத் தின்றுவிடும்.
 
الحديث في المسجد يأكل الحسنات كما تأكل النار الحطب
.
நெருப்பு விறகை எரித்துவிடுவதைப் போன்று பள்ளியில் பேசுவது நன்மைகளை (எரித்து) உண்டு விடும்.
கஸ்ஸாலி, இந்தச் செய்தியை நபிகள் நாயகம் கூறியதுபோல தனது இஹ்யாவு உலூமீத்தீன் என்ற நூலில் கூறியுள்ளார்.
(பாகம் 1 பக்கம் 152)
 
இதன் மூலமாக மக்களுக்கு மத்தியில் இது ஒரு நபிமொழியாகப் பரவியுள்ளது என்பதை உணர முடிகிறது.
ஆனால் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் அறவே கிடையாது. இது அறிவிப்பாளர் தொடர் இல்லாத அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும். பல அறிஞர்கள் இது அடிப்படையில்லாத செய்தி என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
 
تخريج أحاديث الإحياء - (1 / 107(
 حديث " الحديث في المسجد يأكل الحسنات كما تأكل البهيمة الحشيش "
لم أقف له على أصل
 
ஹாபிழ் இராக்கி எனும் அறிஞர் இஹ்யாவை ஆய்வு செய்து இந்தச் செய்தியைக் குறிப்பிடும் போது இந்தச் செய்திக்கு எந்த அடிப்படையையும் நான் அறியவில்லை என்று குறிப்பிடுகிறார். (தக்ரீஜூ அஹாதீஸூல் இஹ்யா பாகம்1 பக்கம் 107)
 
தாஜூத்தீன் அஸ்ஸூப்கி எனும் அறிஞர் இது அறிவிப்பாளர் தொடர் இல்லாத ஆதாரமற்ற செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
தப்காதுஷ் ஷாபிஇய்யா பாகம் 6 பக்கம் 294
 
அல்பானீ அவர்களும் ஸில்ஸிலதுல் அஹாதீஸூல் லயீஃபா எனும் நூலில் (பாகம் 1 பக்கம் 136) இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படைச் சான்றும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
 
முல்லா அலீ காரி அவர்கள் நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அடையாளம் காட்டும் தமது அல் மஸ்னூஆ எனும் நூலில் பக்கம் 92ல் இந்தச் செய்திக்கும் நபிகள்
நாயகத்துக்கும் சம்பந்தமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
இவ்வாறு பல அறிஞர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை மக்களுக்கு அவ்வப்போது தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
எனவே இது நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்பதை அறியலாம்.
 
மேலும் இதற்கு மாற்றமாக நபிகள் நாயகம் அவர்கள் பள்ளிவாசல்களில் இதர பேச்சுக்களைப் பேச அனுமதித்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இருக்கின்றன.

இறை நம்பிக்கையில் இருக்கின்றது தீர்வு

செயல்கள் பிறப்பெடுக்க எண்ணங்களும்,
எண்ணங்கள் தோன்ற சிந்தனையும்,
சிந்தனைக்கு அடித்தளமாய் மனதில் வேறூன்றியுள்ள நம்பிக்கையும் காரணமாய் அமைகின்றன.

இஸ்லாமியக் கோட்பாட்டின் எல்லாப் புள்ளிகளையும் 'நம்பிக்கையே' தீர்மானிக்கின்றது.
இறைவனைப் பற்றிய ஓரிறைக் கோட்பாடு, மரணத்திற்குப் பின்னால் வரவுள்ள மறுவுலக வாழ்க்கை குறித்த நம்பிக்கை — இவ்விரண்டு கருத்துருக்கள்தாம் ஓர் இறைநம்பிக்கையாளனின் (முஸ்லிமின்) அனைத்து செயல்களுக்கும் அடிப்படைக் காரணமாய் அமைகின்றன. இவ்விரண்டின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையின் 'அளவு' தான் அவரிடமுள்ள இஸ்லாமின் அளவைத் தீர்மா னிக்கின்றது. இஸ்லாமியக் கோட்பாடு ஒருவருக்குப் பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம். ஆனால், 'இஸ்லாமியக் கோட்பாடு' என்பது இதுதான் என்பதை அவர் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனை மாற்றியமைக்க யாராலும் — முஸ்லிம் மார்க்க அறிஞர்களாலும் கூட — முடியாது.
கருத்துக்களை, நம்பிக்கையை முன்னிலைப்படுத்த நல்லதொரு வாழ்க்கைக்கு வழிகாட்டுவதில் இஸ்லாம் தனித்து விளங்குகின்றது. கருக்கொலை, சிசுக்கொலை என்று 'நாகரீக உலகம்' என்று மனிதர் எண்ணிக் கொண்டுள்ள இந்நிகழ்கால உலகில் சர்வசாதாரணமாக குற்ற உணர்வின்றி செய் யப்பட்டு வரும் செயல்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் அரேபியாவில் தொடரத்தான் செய்தன.
இதோ, அக்காட்சிகளை வான்மறை குர்ஆன் அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது பாருங்கள்:

'இவர்களில் ஒருவருக்கு பெண்குழந்தை (பிறந்திருப்பது) பற்றி நற்செய்தி' சொல்லப்பட்டால், அவரது முகத்தில் கருமை கவ்விக் கொள்கின்றது. துக்கத்தால் அவரது தொண்டை அடைத்துக் கொள்கின்றது. இந்தக் 'கேவலமான செய்தி' கிடைத்து விட்டதே என்பதற்காக இனி யார் முகத் திலும் விழிக்கக் கூடாது என்று மக்களை விட்டு ஒதுங்கிச் செல்கிறார். அவமானப்பட்டுக் கொண்டு அப்பெண் குழந்தையை வைத்திருப்பதா அல்லது அதனை மண்ணில் புதைத்துவிடுவதா என்று சிந்திக்கிறார்!'  (அல்குர்ஆன் 16-58,59)

நமது நாட்டில் இன்று நம் கண்களுக்கு முன்னால் நடைபெற்று வருகின்ற காட்சிகளை இவ்வ சனங்கள் படம்பிடித்துக் காட்டுவதைப் போன்று இருக்கின்றதா? காலங்கள் பல கடந்தாலும் மனித இயல்பு என்னமோ மாறாமல் அப்படியே தான் இருக்கின்றது.

என்னை அழையுங்கள்


அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!

அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்’ பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 40:60) என்ற இறைவசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும் பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக்கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.

பிரார்த்தனையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்:

பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் இறைவனைப் பணிவுட னும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) நபி ஜகாரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 19:3)

அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)

வலியுறுத்திக்கேட்பது:

அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது ‘நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்’ என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக, ‘இதை நீ தந்து ஆகவேண்டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாது’ என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.

இறைக் கட்டளைக்கு எதிராக முதல் புரட்சி ஏற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் “பெருமை”தான்

அல்லாஹ் கூறுகிறான்;

''ஆதமுக்குப் பணிந்து சுஜூது செய்யுங்கள் என்று வானவர்களுக்கு நாம் கூறியபோது, அனைவரும் பணிந்து சுஜூது செய்தனர். இப்லீஸைத் தவிர. அவன் விலகிக் கொண்டான். பெருமை அடித்தான். இன்னும் காஃபிர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான்.'' (அல்குர்ஆன்: 2:34)

இதே கருத்தில் இன்னும் பல வசனங்கள் உள்ளன. அல்குர்ஆனை முழுமையாக உற்று நோக்கினால் இறைக் கட்டளைக்கு எதிராக முதல் புரட்சி ஏற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் “பெருமை”தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இப்லீஸ் காஃபிராக-ஷைத்தானாக-தீயசக்திகளின் தலைவனாக ஆனதற்குக் காரணம் “பெருமை’ தான். ஷைத்தானுடைய குணமாகிய “பெருமை’ பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவான முறையில் விளங்கி வைத்திருக்க வேண்டும்.
ஆனால்... பெருமை என்றால் என்ன? என்னென்ன செயல்கள் பெருமையில் கொண்டுபோய்ச் சேர்க்கும்? பெருமையின் விளைவுகள் என்ன? என்பது பற்றி எல்லாம் தெளிவான கண்ணோட்டம் நம்மிடத்தில் இல்லை. எனவே பெருமை பற்றி மார்க்கம் இடும் கட்டளைகளைப் பார்ப்போம்.

அல்லாஹ் கூறுகிறான் :

போர்த்திக்கொண்டு இருப்பவரே! எழுந்து (மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக! உமது ரட்சகனைப் பெருமைப்படுத்துவீராக. (அல்குர்ஆன் : 74:1,2,3)
வானங்களிலும், பூமியிலும் உள்ள பெருமைகள் (அனைத்தும் அல்லாஹ்வாகிய) அவனுக்கே உரியது. அவன்தான் (யாவற்றையும்) மிகைத்தவன் நுண்ணறிவு மிக்கவன். (அல்குர்ஆன் : 45:37, 59:23)

கண்ணியம் எனது கீழாடையாகும். பெருமை எனது மேலாடையாகும். இவ்விரண்டில் ஏதேனுமொன்றோடு ஒருவன் என்னிடம் தர்க்கம் செய்தால் (போட்டியிட்டால்) அவனை நான் கடுமையாகத் தண்டிப்பேன் என்று அல்லாஹ் எச்சரிப்பதாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதார நூல்: முஸ்லிம் 2620)
 
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )