Sep 8, 2011

தொழக்கூடாத மூன்று நேரங்கள்

தொழக்கூடாத மூன்று நேரங்கள்
மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.
  • சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.
  • நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை
  • சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி). நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸில் தொழுகைக்குத் தடை செய்யப்பட்ட நேரங்கள் எவை என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
சூரிய உதயம், உச்சி , அஸ்தமனம் போன்றவை ஒரு வினாடியில் முடிந்து விடுவதில்லை. உதாரணமாக சூரியன் உதிக்கத் துவங்கி அது முழுமையாக வெளியே வருவதற்கு சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் ஆகும். (இந்த நேரம் குறித்து முறையான ஆய்வு யாரும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. நாம் விசாரித்தவரை.
சூரியன் முழுமையாக வெளியே வந்து விடும் என்ற கருத்து தான் உள்ளது அதுபோன்று உச்சிக்கு வந்த பின்னர் உச்சியிலிருந்து சாய்ந்து பொருட்களில் நிழல் விழுவதற்கு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் ஆகும். அஸ்தமன நேரத்திலும் சூரியன் மறையத் துவங்குதற்கும் முழுமையாக மறைவதற்கும் இடையே இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தேவை. இந்த நேரங்களில் தொழுவதற்குத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதிக்கின்றார்கள்.
அதனால் இந்த இடைப்பட்ட நேரம் தொழுவதற்குத் தடை என்பது தான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து கிடைக்கும் விளக்கம் ஆகும். இதைத் தவிர பேணுதல் என்ற பெயரில் நிமிடங்கள் முன்னரும் நிமிடங்கள் பின்னரும் தொழக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை

களாத் தொழுகை உண்டா?

தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்


 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது அல்குர்ஆன் 4: 103

தொழுகையை பிற்படுத்துவது தீயவர்களின் செயல் என்றும் கடமையான தொழுகைகளைக் குறிக்கப்பட்ட நேரத்திலேயே நிறைவேற்ற வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள் அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும் என்று கேட்டார்கள். நான் (அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்து கொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும் என்று கூறினார்கள். முஸ்லிம் 1340

தொழுகைகளை அவற்றுக்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதையே அல்லாஹ் விரும்புகிறான்

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்

நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது என்று கேட்டேன். அவர்கள் உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றார்கள். புகாரி 527

எனவே தொழுகைகளை அவற்றுக்குரிய நேரங்களில் தொழுவதற்கே நாம் முயற்சிக்க வேண்டும். நமது சக்திக்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாது சில காரணங்களுக்காக மட்டும் நேரம் தவறி விடுபடட்ட தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு அனுமதி உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்து விட்டால் அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1217 

தூக்கமும் மறதியும் நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களாக உள்ளன. எனவே இந்தக் காரணங்களுக்காக மட்டும் ஞாபகம் வந்தவுடன் தொழுவதற்கு அதாவது களா செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள். உறக்கத்துக்கும் மறதிக்கும் மட்டுமே இந்தப் பரிகாரம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டால் அவர் அத்தொழுகையை களாச் செய்ய முடியாது. அப்படி செய்தாலும் அவர் செய்த குற்றத்துக்கு இது பரிகாரம் ஆக முடியாது. மாறாக அவர் தொழுகையை விட்ட குற்றத்துக்குரியவர். இக்குற்றம் அடுத்து நம்மிடத்தில் ஏற்படாதவாறு கவனமாக இருக்க வேண்டும். மேலும் இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக்கொள்ள வேண்டும். தூக்கமும் மறதியும் ஒருவருக்கு தினமும் ஏற்படாது. அப்படி ஏற்படும் வகையில் நாம் நடந்துகொள்ளக் கூடாது. எனவே தொழுகையை முறைப்படி நிறைவேற்றினால் தினமும் களாச் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.

source: www.onlinepj.com


0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )