Jun 25, 2012

தாய்ப்பாலூட்டல் இஸ்லாமிய ஷரீஅத்தும் நவீன ஆய்வுகளும்

 சிறுவயதில் தாய்ப்பாலூட்டப்பட்ட பெண்களுக்கு தாய்ப்பாலூட்டப்படாத பெண்களை விட மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு எனக் கண்டுபிடித்தது.


தாய்ப்பாலூட்டல் இஸ்லாமிய ஷரீஅத்தும் நவீன ஆய்வுகளும்
  எஸ்.எம்.எம் மஸாஹிர், நளீமி 
ஒரு குழந்தை பிறந்ததும் அதற்குத் தாய்ப்பாலூட்டுவது தொடர்பாக அதன் தாய் கொண்டிருக்கும் கருத்து மிகவும் செல்வாக்கு மிக்கதானதாகும். அக்கருத்தின் அடிப்படையில்தான் அப் பிள்ளையின் உடல், உள, அறிவு வளர்ச்சியும் சிலபோது அதன் முழு வாழ்வும் தங்கியுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம்கள் கொண்டிருக்க வேண்டிய சரியான கருத்தை இஸ்லாமிய ஷரீஅத்தினதும் நவீன அறிவியல் ஆய்வுகளினதும் நிழலில் இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.
ஒரு குழந்தைக்கு அதன் தாய்தான் மிகவும் நெருக்கமானவள். அவள்தான் அப்பிள்ளையின் மீது மிகவும் பாசமும் இரக்கமும் கொண்டவள். அவளது தாய்ப்பால்தான் எல்லா வித உணவு, பானங்களை விடவும் மிக உயர்ந்த உணவு என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டல் தொடர்பாக அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.
'(தங்களுடைய குழந்தைக்கு தம் மனைவிகளைக் கொண்டே) பால் ஊட்டுவதைப் பூர்த்தியாக்க விரும்புகிறவருக்காக, தாய்மார் கள், தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டு வரை பூரணமாகப் பாலூட்டுவார்கள். இன்னும் (பாலூட்டும் இக்காலங்களில்) அவர்களுக்கு உணவும், அவர்களுக்கு உடையும் முறைப்படி (வழங்குவது) தகப்பன் மீது கடமையாகும். எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கேற்றவாறல்லாது (செய்யும்படியாக) சிரமப்படுத்தப்படமாட்டாது. ஒரு தாய் தன் குழந்தையின் காரணமாக, இன்னும் ஒரு தந்தை தன் குழந்தையின் காரணமாக துன்புறுத்தப்படமாட்டார். (குழந்தையின் தகப்பன் இறந்து விட்டால், அதனைப் பரிபாலிப்பது) இவ்வாறே வாரிசின் மீது (கடமை) இருக்கிறது. (குழந்தையின் தாய், தகப்பன்) இருவரும் சம்மதித்து, ஆலோசனை செய்து, (குழந்தையின்) பால்குடியை (இரண்டு ஆண்டுகளுக்குள்) மறக்கடிக்க நாடினால், (அவ்வாறு செய்வது) அவ்விருவர் மீதும் குற்றமல்ல. நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு, (செவிலித்தாயைக் கொண்டு) பாலூட்டவும் நாடினால், நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படி ஒப்படைத்து விட்டால், உங்கள் மீது குற்றமாகாது. நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றைப் பார்க்கக் கூடியவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (சூறதுல் பகரா : 233)
மேலே குறிப்பிடப்பட்ட இறை வசனம் பின்வரும் அம்சங்களைத் தெளிவுபடுத்துகின்றது.
01. தனது குழந்தைக்கு போதுமான காலப்பகுதி வரை பாலூட்டுவது அதன் தாய் மீது கடமையாகும்.
02. ஒரு குழந்தைக்குப் பூரணமாகப் பாலூட்டுவதற்கான காலப்பகுதி இரண்டு வருடங்களாகும்.
03. குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள தாய்க்கும், மீட்டி எடுத்துக் கொள்ள முடியுமான விவகாரத்துக்குரிய (தலாக் ரஜஈ) இத்தாவில் இருக்கும் தாய்க்கும் பாலூட்டுவதற்கென உணவு, உடைச் செலவினம் தனியாக வழங்கத் தேவையில்லை. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் சாதாரனமாக கணவன் அவள் மீது செலவழிக்கக் கடமை ப்பட்டுள்ளான். ஆனால், இத்தா முடிந்து விட்டாலோ, மீட்ட முடியாத விவாகரத்து (தலாக் பாயின்) மூலம் பிரிந்து விட்டாலோ அக்குழந்தைக்குப் பாலூட்டும்படி அதன் தாயை நிர்ப்பந்திக்க முடியாது. பாலூட்டுவதற்கு அவள் இணங்கினால் அவளுக்கு உணவு, உடைச் செலவினம் வழங்குவது தந்தை மீது கடமையாகும்.
04. விவாகரத்து செய்யப்பட்டு, இத்தாக் காலமும் முடிவடைந்த தாயைப் பொறுத்த மட்டில் இரண்டு நிலைமைகளில் அக் குந்தைக்கு பாலூட்டும் படி அவளை நிர்ப்பந்திக்கலாம்.
(அ) குழந்தை வேறு தாயிடம் பால் குடிப்பதற்கோ புட்டிப்பால் குடிப்பதற்கோ முற்றாக மறுப்புத் தெரிவித்தால்
(ஆ) தந்தையிடம் செவிலித் தாயைப் பெற்றுக் கொள்வதற்கான பண வசதியோ, குழந்தைக்கு செலவழிக்க அதற்குரிய சொத்தோ, வேறு உதவி செய்பவர்களோ இல்லாது இருந்தால்
05. குழந்தை தந்தையை இழந்து விட்டால் தந்தையின் சொத்தில் வாரிசுரிமை பெறுவோர் (தந்தையின் தந்தை, மூத்த சகோதரன், பெரிய தந்தை, சிறிய தந்தை போன்றோர்) அக்குழந்தைக்கான செலவினங்களைச் செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.
06. தாயும் தந்தையும் உடன்படும் சந்தர்ப்பத்தில் குழந்தைக்குத் தீங்கேதும் ஏற்படாது எனும் பட்சத்தில் இரண்டு வருடங்கள் பூரணமாக முன்பே பால்குடி மறக்கடிக்கலாம்.
07. தேவைப்படும் பட்சத்தில் செவிலித் தாய் ஒருவரைக் கூலிக்கமர்த்தலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் குழந்தையாக இருக்கும் போது ஹலீமா நாயகி செவிலித் தாயாக இருந்தார்கள்.
08. இவ்விவகாரங்களில் எல்லாம் அல்லாஹ்வைப் பயந்து நடந்து கொள்ள வேண்டும். அவன் அனைத்து விடயங்களையும் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்க வேண்டும். (கௌசர் முஹம்மத் அல் மீனாவீ, ஹுகூகுத் திப்ல் பில் இஸ்லாம், பப.36,37)
அல்லாஹ்தஆலா ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்ததிலிருந்து தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டி வந்துள்ளார்கள். சொந்தத் தாய்க்கு நோய், வேறு காரணங்கள் இருந்தால் செவிலித் தாயை கூலிக்கமர்த்தி, தாய்ப்பாலை அருந்தச் செய்துள்ளனர். இதன் மூலம் குழந்தைகள் பரம்பரை பரம்பரையாக சீரான வளர்ச்சியைப் பெற்று, வாழ்ந்து வந்துள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து செயற்கை பால்மா(புட்டிப்பால்) தோற்றம் பெற்றது. பால்மா உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பால்மாவை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்தின. பல்வேறு பால்மா வகையறாக்கள் வெளிவந்தன. அவற்றை விற்பனை செய்வதற்காக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தோன்றின. தாய்மார்களின் எண்ணங்களையும் சிந்தனையையும் அவை வசீகரித்தன.
குழந்தைக்குப் பாலூட்டுவதால் தாயின் அழகு குறைந்து விடும் எனவும், பாலியல் இன்பம் அருகிவிடும் எனவும் பொய்ப் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிழையான கருத்துக்களை உள்வாங்கிய தாய்மார்களுள் பெருந் தொகையானோர் தமது பாசக் குழந்தைகளுக்கென அல்லாஹ்வால் உருவாக்கித் தரப்பட்ட நிறையுணவைக் கொடுக்காது தடுத்துக் கொண்டனர். இதனால் மார்பகப் புற்று நோய் போன்ற நோய்களுக்கு அவர்களுள் கணிசமானோர் உட்பட்டனர்.
தமது குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் மிக அரிதாகவே மார்பகப் புற்று நோய், கர்ப்பப்பைப் புற்று நோய் போன்ற பயங்கர நோய்களுக்கு உட்படுகின்றனர் என்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன
(தங்களுடைய குழந்தைகளுக்கு விவாகரத்துச் சொல்லப்பட்ட தன் மனைவியர்களைக் கொண்டே)பாலூட்டுவதைப் ©ர்த்தியாக்க (கணவர்) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டல் வேண்டும் (பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு உணவும், அவர்களுக்கு உடையும் முறைப்படி கொடுத்துவருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்.
எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் சிரமம் கொடுக்கப்படமாட்டாது. தாய் தன் குழந்தையின் காரணமாகவோ இன்னும் தந்தை தன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டார்; (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அவருடைய) வாரிசின் மீதும் அதேபோன்று (கடமை) இருக்கிறது. இன்னும், (தாய், தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்து பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை. (ஸூறா பகரா: 233)
தாய்ப்பாலூட்டல் தொடர்பாக நவீன ஆய்வுகள் எவ்வகையான முடிவுகளைத் தந்துள்ளன என்பதையும் அவை அல்-குர்ஆனின் கருத்துக்களோடு எவ்வாறு இணைத்து செல்கின்றன என்பதையும் நோக்குவோம்.
மனிதக் குழந்தைகளுக்கு வழங்கப்பட முடியுமான மிக ஆரோக்கியமான பால் வகை தாய்ப்பாலாகும். ((Picciano M (2001) "Nutrient composition of human milk", Pediatr clin North)) அதில் சில விதிவிலக்குகள் உண்டு. தாய் சில குறிப்பிட்ட மருந்து வகைகளைப் பாவிக்கும் போது அல்லது சயரோகத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது அல்லது HIV வைரஸ் பீடித்திருந்தால் அத்தாயின் பால் பிள்ளைக்கு உகந்ததன்று. தாய்ப்பாலூட்டல் ஆரோக்கியத்தை விருத்தி செய்யும். நோயைத் தவிர்க்க உதவும்ளூ ஆரோக்கியத்துக்காக கவனம் செலுத்த வேண்டியதைக் குறைவடையச் செய்யும். பாலுக்கான செலவினைக் குறைக்கும். அபிவித்தி அடைந்த, அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் செயற்கை பால்மாவினால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கின் காரணமாக அதிக மரணங்கள் ஏற்படுகின்றன. (Horton S.....(1996) "Breast Feeding Promotion and.....(1996) priority setting in health", Health policy plan)
தாய்ப்பாலில் உள்ளடங்கியுள்ள எல்லா குணாதிசயங்களையும் எம்மால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. ஆனால் அதன் போஷாக்குத் தன்மையோடுள்ள பகுதியைப் பார்க்கும் போது அது ஒப்பீட்டளவில் ஸ்திரமான, நிடித்து நிற்கின்ற இயழ்பைக் கொண்டுள்ளதாகும். தாய்ப்பால் தாயின் இரத்தத்தில் உள்ள போஷாக்குகளைப் பெறுவதோடு, அது அவளது உடலினுள்ளேயே சேமித்து வைக்கப் படுகின்றது. தாய்ப்பால் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் தேவையான கொழுப்பு, சீனி (சர்க்கரை), நீர், புரதம் என்பவற்றைச் சரியான அளவில் உள்ளடக்கியுள்ளது. அது ஒரு நாளைக்கு சராசரியாக 500 களரி (calories) பயன்படுத்தப்படுத்துகின்றது. இது பிரசவத்துக்குப் பின்னர் தாயின் எடையில் குறைவை ஏற்படுத்தவும் துணை நிற்கின்றது. தாய்ப்பாலில் உள்ளடங்கியுள்ள பதார்த்தங்கள் பிள்ளை ஒரு தடவை பால் குடிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் நேரம், பிள்ளையின் வயது என்பவற்றுக்கேற்ப வேறுபட்டமையும். தாய்ப்பாலுடைய தரமும் அவளின் மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள், நாட்பட்ட, நோய்கள், புகைத்தல், மது அருந்தல் போன்றவற்றால் மாற்றமுறும். ((Denise fisher, "social Drugs and Breast feeding "
தாய்ப்பால் கொண்டுள்ள சிறப்புத் தன்மைகளையும் தாற்பரியங்களையும் சிறுவர் நல விஷேட வைத்தியர் டாக்டர் ஹம்தீ அல்-ஜூன்தீ பின்வருமாறு விளக்குகின்றார்.
1. தாய்ப்பால் நேரடியாக தாயின் மார்ப்பகத்திலிருந்து குழந்தையின் வாய்க்குள் ஊட்டப்படுவதனால் அங்கு பால் மாசுறுவதற்கான வாய்ப்பு இல்லை.
2. பருவகாலங்களுக்கு ஏற்ப தாய்;ப்பாலின் உஷ்னம் மாறுபடும். அது கோடை காலத்தில்; குளிரானதாகவும் மாரிகாலத்தில் சூடானதாகவும் அமைந்திருக்கும்.
3. தாய்ப்பாலில் உள்ளடங்கியுள்ள பதார்த்தங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப வேறுபடும்.
4. குழந்தை பிறந்து ஆரம்ப நாட்களில் வெளிவரும் 'சீம்பால்' வியோதிகளைத் தடுக்கவல்லது. குழந்தையை அது கிருமிகளில் இருந்து பாதுகாப்பதோடு அதன் மூளை வளர்ச்சிக்குத் தேவையான பல ஊட்டச் சத்துக்களையும் கொண்டது.
5. குழந்தை ஒரு தரம் பால் அருந்தும் போது கூட பால் அருந்த ஆரம்பித்த நேரத்தில் உள்ளதை விட வித்தியாசமான பதார்த்தங்களே இறுதியில் அமைந்திருக்கும்.
6. கிறுமிகளை தடுக்கவல்ல பல்வகையான ஊட்டச் சத்துக்கள் தாய்ப்பாலில் நிரம்பியுள்ளன. தாய்ப்பால் அருந்தும் பிள்ளை மிகக் குறைவாகவே இரைப்பை
7. தாய் கல்சியம் குறைந்த ஒரு பெண்ணாக இருப்பினும் அவளது தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையானளவு கல்சியம் காணப்படும்.
8. தாய்ப்பால் அருந்தும் பிள்ளை பாலோடு தாயின் அன்பு, பாசத்தையும் உள்வாங்கிக் கொள்கின்றது. இதனால் பிள்ளை நல்ல உள ஆரோக்கியத்தைப் பெற்று, உளரீதியான நோய்களிலிருந்தும் பாதுகாப்புப் பெருகின்றது.
9. தாய்ப்பால் அருந்துவது மனித நடத்தைகளிலும் மாற்றத்தைத் தரும். உலகில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரில் சிலரிடம் நடாத்தப்பட்ட ஆய்வில், அவர்களுள் பெரும்பாலானோர். தாய்ப்பால் அருந்தாதோர் எனத் தெரியவந்தது. அதனால்தான் தாய்ப்பால் 'பாலூட்டுவதற்கு முட்டாள் பெண்களை கூலிக்கு அமர்த்த வேண்டாம். ஏனெனில் பால் பாரம்பரிய குணங்களை கடத்தக் கூடியதாகும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் நவின்றுள்ளார்கள்.


வைத்தியர்கள் ஆரம்பகாலங்களில் இயற்கையான பாலூட்டல் பிள்ளை தனது தாயோடு இறுக்கமான உளரீதியான தொடர்பை மாத்திரமே ஏற்படுத்துவதாக நினைத்திருந்தனர். வேறு எந்தப் பயன்பாடும் இல்லை என அவர்கள் கருதினர். ஆனால் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக செய்யப்ட்ட ஆய்வுகளை தொடர்ந்து தாய்ப்பாலூட்டலினால் ஏற்படும் அதிக பயன்பாடுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அது மாத்திரமின்றி, அறிஞர்கள் ஒவ்வொரு நாளும் தாய்ப்பாலினால் ஏற்படும் புதிய பிரயோசனங்களை கண்டுபிடித்து வருகின்றனர். Immunoglobulins எனப்படும் நோய் எதிர்ப்புக் களங்கள் முதன்முதலில் தாய்ப்பாலில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அது பக்டீரியா, வைரஸ் வகைகளை எதிர்த்து நிற்கக் கூடியதாகும். அத்தோடு பசுப்பாலினால் உருவான புட்டிப்பாலை அருந்தி வந்த பிள்ளைகளின் வயிற்றில் தாய்ப்பலை அருந்திய பிள்ளைகளின் வயிற்றில் உள்ளதை விட பத்து மடங்கை விட அதிகமான அளவு பக்டீரியாவின் அளவு இருப்பதாக அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
  தாய்ப்பாலினால் குழந்தைக்கு ஏற்படும் பயன்கள் 
U.S Agency For Healthcare Research and Quality (AHRQ), World Health Organization (WHO) போன்ற நிருவணங்கள் 2007 இல் மேற்கொண்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் ஊடாக குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதன் மூலம் அதிக பயன்கள் ஏற்படுவதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் மிக முக்கியமானதைக் கீழ்வருமாறு சுருக்கித் தருகிறோம்.
o நோய் வராது தடுத்துக் கொள்ளக்கூடிய சிறந்த ஆரோக்கியம்.
தாய்ப்பாலூட்டும் போது கிருமிகளை அழிக்கக் கூடிய பொருட்கள் குழந்தையின் உடலினுள் செலுத்தப் படுகின்றது. தாய்ப்பால் கிருமிகளைப் பரவச் செய்வதைத் தடுக்கக்கூடிய பல்வேறு பதார்த்தங்களை உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக அமீபிய நுண்ணுயிர்கள் பரவுவதைத் தடுக்கக்கூடிய டிடைந ளயடவ ளவiஅரடயவநன டipயளநஇ குடலில் ஏற்படும் பக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து, இரும்புச் சத்தை வழங்கக் கூடிய டயஉவழகநசசinஇ மிகச் சிறிய உயிரினங்கிளிலிருந்தும் பாதுகாக்கக் கூடிய iஅஅரழெபடழடிரடin என்பவற்றைக் கூறலாம். (Glass RI,....(1983) "Protection against cholera in breast-fed children by antibodies in breast milk")
o மிகக் குறைவான நோய்த்தாக்கம்.
தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகள் தாய்ப்பாலூட்டப்படாத குழந்தைகளை விட நோயுடைய தாக்கம் பெறும் வீதம் மிகக் குறைவாக உள்ளது. 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆரம்ப ஏழு மாதங்கள் தாய்ப்பாலூட்டப்பட்ட
பிள்ளைகளுக்கு சிறுநீரக நோய் பரவும் வீதம் மிகக் குறைவாகக் காணப்பட்டது. (Marlid s,....(2004) "protetive effect of breast feeding against urinary tract infection")
o
உயர் நுண்ணரிவு.
தாய்ப்பாலூட்டல் குழந்தைகளின் அறிவு மட்டத்தில் தாக்கம் செலுத்துகின்றதா என மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், குழந்தைகளின் சிந்தனைத் திறன், புத்தி சாதூர்யத்தல் மாற்றத்தை ஏற்படுத்தும். எனக் கூறுகின்றன. WHO 2007 இல் மேற்கொண்ட ஆய்வில் 'தாய்ப் பாலூட்டப்பட்ட பிள்ளைகளின் நுண்ணரிவுப் பரீட்சைகளில் உயர்தரத்தை வெளிப்படுத்தினார்கள்' என்ற முடிவு பெறப்பட்டது.
(Horta BL,...(2007), Evedence on the long-term effects of breast feeding: systematic reviews and meta-analyses, geneva, WHO).
o பிற்பட்ட கால சுகாதார விளைவுகள்.
சிறு குழந்தையாக இருக்கும் போது பாலூட்டிருந்தால் வளர்ந்த பெரியவரானதும் பல விளைவுகள் சாதகமாக அமைந்து விடுகின்றன. தாய்ப்பால் ஆரஉiளெ எனும் ஒருவகை எதிர்ப்புப் பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. அவை அதிக புரதங்களையும் காபோவைதரேற்றுக் களையும் உள்ளடக்கியவையாகும். அவை பக்டீரியாக்களுனும் வைரஸ்களுடனும் ஒட்டிக் கொண்டு, இறுதியில் இரசாயன மருந்துகளுக்கு மாற்றமாக - எந்தவிதமான பக்கவிளைவுகளுமின்றி அவற்றை முற்றாக அழித்து விடுகின்றன.
தாய்ப்பாலூட்டப்பட்ட பிள்ளைகளுக்கு மிகக் குறைவாகவே ஆஸ்த்மா, ஒவ்வாமை (Allergic) நோய்கள் ஏற்படுவதோடு சுவாச நோய்கள், வயிற்று நோய்கள் என்பவற்றுக்கு எதிராகவும் தாய்ப்பால் செயற்படுகின்றது.
(Mead MN (2008) "Contaminants in human milk: weighing the risks against the benefits of breast feeding").
(Nichols HB,...(2008) "effects of birth order and maternal age on breast cancer risk: modification by whether women had been breast-fed")
பசுப் பாலில் தாய்பாலில் உள்ளதைவிட இரு மடங்கு புரதம் உண்டு. அதனால் அந்தப் புரதத்தின் அளவை அப்படியே உறிஞ்சி எடுத்து, குழந்தை அதனது உடலில் சேமித்து வைத்துக் கொள்ளமுடியாது. அதன் காரணமாக கொழுப்பதோடு தொடர்பான நோய்கள் எதிர்காலத்தில் தோன்றுகின்றன. அதே நேரம் தாய்ப்பாலில் உள்ள புரதத்தைக் குழந்தை முழுமையாக 100 வீதத்தையும் உறிஞ்சிக் கொள்கின்றது. அதே போன்று அக்குழந்தை தாய்ப்பாலில் இருந்து எடுத்த புரதத்தை சமிபாடடையச் செய்வதற்கு 15 நிமிடங்கள் எடுக்கின்றது. அதே வேளையை பசுப்பாலின் மூலம் செய்வதற்கு 60 நிமிடங்கள் எடுக்கின்றது. எனவே, தாய்ப்பால் நேரத்தையும் சிரமத்தையும் மிச்சப்படுத்துகின்றது .
  தாய்ப்பாலூட்டுவதால் தாய்க்கு ஏற்படும் பயன்கள் 
தாய்ப்பாலூட்டுவதன் மூலம் குழந்தைக்கு மாத்திரமின்றி பாலூட்டும் தாய்க்கும் பல பிரயோசனங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
30 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், தனது மார்பகத்திலுள்ள பாலை ஊட்டும் தாய்மார்கள் குறைவாகவே மார்பகப் புற்றுநோய்க்கு ஆட்படுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.(Jernstorm, H, "Breast-feeding and the risk of breast cancer in BRCA 1 and BRCA 2 Mutation carriers ")
தாயின் கர்ப்பப்பை மகப்பேறு, பிரசவத்தின் போது 20 மடங்கு விரிவடைகின்றது. இயற்கையான பாலூட்டல் அந்தக் கர்ப்பப்பையை இயல்பான அளவுக்கு மீட்டிக் கொண்டு வந்து விடுகின்றது எனவும் தனது பிள்ளைக்கு தாப்பாலூட்டாத தாயுடைய கர்ப்பப்பை சாதாரண அளவை விட பெரிதாகவே இருக்கும் எனவும் தாயப்பாலூட்டல் கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
தாய்ப்பாலூட்டல் தாயின் எடையைக் குறைப்பதற்கும் கொழுத்தலை விட்டும் காப்பதற்கும் உதவுவதோடு இயற்கையான ஒரு மனநிம்மதியை அது வழங்குகின்றது. அதனால் குழந்தைக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கின்ற அதேவேளை தாயும் நன்கு தூங்குவதற்கு வாய்ப்பேற்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், கூடுதலான காலப்பகுதி பாலூட்டுகின்ற பெண்மணி (ஆகக் குறைந்தது 24 மாதங்கள்) மிகக் குறைவாகவே இருதய நோயால் பாதிக்கப்படுகின்றாள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. (Gunderson, Erica P (2009) "Prospective evidence that lactation protects against cardiovascular disease in women")
அதே போல சர்க்கரை நோய்  உள்ள தாய்மார்கள் பாலூட்டும் போது மிகக் குறைவான இன்சுலின் தேவைப்படுகின்றது. (Rayburn w,...."changes in insulin therapy during pregnancy"). அத்தோடு Malmo University, 2009 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வொன்றில், நீண்ட காலம் தாய்ப்பாலூட்டும் பெண்களுக்குக் குறைவாகவே வாதத்தோடு கூடிய முழங்கால் வீக்கம் (Rheumatiod arthrits) ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (Pikwer M,...(2009) "Breast feeding, but not use of oral contraceptives, is associated with a reduced risk of rheumatoid arthritis").
  தாய்ப் பாலூட்டுவதால் ஏற்படும் சமூகப் பயன்கள் 
தாய்ப்பாலூட்டுவதனூடாக அதிகமான நற்பயன்கள் சமூகரீதியாகவும் ஏற்படுகின்றன. இன்று செயற்கைப் பாலூட்டல் போன்று இயற்கைப் பாலூட்டல் வலியுறுத்தப் படுவதில்லை. சிறுவர் வைத்தியத்திற்குரிய அமெரிக்க எகடமி கூறும் கீழ்வரும் தகவல் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஐக்கிய அமெரிக்கா மாத்திரம் இந்த இயற்கையான பாலூட்டலைப் பின்பற்றுமாயின் அது வருடாந்தம் 3600 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீதப்படுத்த முடியும். இதன் மூலம் பெரும் பொருளாதார வளத்தை, பல அபிவிருத்தி திட்டங்களுக்குச் செலவிடலாம்.
தாய்ப்பாலூட்டல் சூழல் பாதுகாப்புக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். புட்டிப் பால் பொதி செய்வதற்காக தகர, கண்ணாடி போத்தல்கள் உற்பத்தி செய்வதனூடாகவும் பசுப்பாலை உலர்த்துவதனூடாகவும் ஏற்படும் சூழல் மாசடைவு புட்டிப்பாலை பாவித்ததன் பின்னர் அதன் தகர, கண்ணாடிக் குவலைகளால் ஏற்படும் பாதிப்பு என்பன சமூக ரீதியாகப் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
வில்லியம் மெக்டோகல் எனும் அறிஞர் கூறும் போது, 'இன்றைய சமூகம் புட்டிப்பாலின் அடிப்படையில் வளர்ந்துள்ளதையே நான் காண்கின்றேன். எனவே வன்முறைகளும் விரக்தியும் உறவுகளில் பூசலும் ஜீவகாருண்ய மின்மையும் வெளிப்படவே செய்யும். குழந்தை பால் குடிக்கும் போத்தலை சட்ட ரீதியாக தடைசெய்யும் போதுதான் இப்பிரச்சினைகள் தீரும்' என்கின்றார்.
  தாய்ப்பாலூட்ட வேண்டிய காலப்பகுதி 
தாய்ப்பாலூட்ட வேண்டிய காலப்பகுதி தொடர்பாக சர்வதேச சுகாதார நிறுவனமும் யுனிசெப் நிறுவனமும் பாலருந்தும் குழந்தைகளிடத்தில் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவில் அது இரண்டு வருடங்களாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளன. ஏனெனில் குழந்தையின் முதலிரு வருடங்களில் தாய்ப்பாலின் மீது மிக முக்கிய தேவையுடையதாக அது இருக்கும். இரு வருடங்களுக்கு முன்பு அதன் உறுப்புக்களால் தானாக எதிர்த்து நிற்க முடியாது.
உலக சுகாதார நிறுவனம் 2001 ஆம் ஆண்டு "Complementary feeding" என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடாத்தியது. அதன் இறுதியில் பின்வருமாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.
"The first two years of a child’s life are a critical window during which the foundations for healthy growth and development are built. Infant and young child feeding is a core dimension of care in this period"
"ஒரு குழந்தையின் வாழ்வில் முதலிரு வருடங்கள் என்பது அதனது ஆரோக்கியமான வளர்ச்சி, விருத்தி கட்டியெழுப்பப்டும் மிக முக்கியமான காலப்பகுதியாகும்.
குழந்தையும் சிறு பிள்ளையினதும் தாய்ப்பாலூட்டல் இக்காலப்பகுpதியில் அடிப்படையாகக் கவனிக்க வேண்டிய அம்சமாகும். "(Complementary feeding, Report of the global consultation, Geneva, 10-13 December,2001)"
அல்-குர்ஆன் சூறதுல் பகரா - 233 ஆம் வசனத்தில் விபரித்துள்ள கருத்துக்களையே மேற்சொன்ன அறிக்கையும் விபரிப்பதைக் காணலாம்.
இந்த வகையில் அல்-குர்ஆன் மிகத் தெளிவாக முன்வைக்கும் தாய்ப் பாலூட்டுவதற்கான கட்டளையை, பிள்ளைக்கான அந்த உரிமையை கட்டாயமாகத் தாய்மார்கள் பின்பற்ற வேண்டும். நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இக்கருத்தை அறிவியல் பூர்வமாகவே நிறுவுகின்றன. எனவே, இவற்றை சீர்தூக்கிப் பார்த்து, தாய்மார்கள் செயற்படுவதற்கு தாய்மார்கள் முன்வருவார்களாக.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )