Feb 5, 2014

இறந்தவர்களுக்காக என்னென்ன செய்யலாம்?


முஸ்லிம் எவராவது இறந்து விட்டால் அவரது உறவினர்கள் அவருக்காக” ஃபாத்திஹா ஓதுதல்” என்ற பெயரில் பெரிய சடங்கு செய்கின்றனர். இது திருமண வீடோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு மரணம் அடைந்தவர் வீட்டின் நிலை இருக்கும்.

அடக்கம் செய்து வந்த பிறகு இறந்த நாளிலிருந்து 3ம் நாள்,10ம் நாள், 40ம் நாள், அரை வருட ஃபாத்திஹாக்கள், ஒரு வருட பாத்திஹாக்கள் என்று விஷேசம் நடைபெரும். சில ஊர்களில் 10,20,30 என்று நாட்கணக்கிலும், ஏன் சில ஊர்களில் தினமும் இரவு மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு 40 நாட்களுக்கும் பாத்திஹாக்கள் ஓதி வருவர்.

இது உண்மையில் இஸ்லாம் அறிமுகப்படுத்திய நடை முறையா? என்றால் இல்லை இந்த பாத்திஹாக்கள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதிலிருந்து இது மார்க்கதில் இல்லாத ஒன்றும், பித்அத் என்றும் அறியலாம்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்தவர்களுக்கு இது போன்ற ஃபாத்திஹாக்களை ஓதும்படி கற்றுத்தரவில்லை. இறந்தவர்களுக்கு ஏதாவது நன்மை போய் சேரவேண்டுமென்று தான் மக்களில் பலர் ஃபாத்திஹாக்களை ஓதி வருகின்றனர். இறந்தவர்களுக்கு என்ன செய்யலாமென்று இனி ஹதீஸ் ஆதாரங்களைப் பார்ப்போம்.

 துஆச் செய்தல்

மைய்யித்தை அடக்கி விட்டு அங்கே நின்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களின் சகோதரருக்காக பாவமன்னிப்பு கேளுங்கள். அவருக்கு உறுதியைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத், ஹாகிம்)
குடும்பத்தாரோ இறந்தவருக்கு தான் துஆக் கேட்காமல் கபுருக்கு அருகில் இமாம் ஃபாத்திஹா ஒத மற்றவர் ஆமின் கூறும் நடைமுறையையே காணுகிறோம்.

அடுத்து இறந்தவருக்காக அவரது குழந்தைகள் துஆச் செய்யவேண்டும்.

ஒரு மனிதன் இறந்துவிட்டால் அனைத்தும் நின்றும் விடுகின்றன. நன்மையைத் தொடர்ந்து தரும்படியான இவன் செய்த தர்மம், பிறர் பயன்படும் கல்வி, இவனுக்காக துஆச் செய்யும் இவனது குழந்தை ஆகிய மூன்றைத்தவிர என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்)

இந்த ஹதீஸில் பிள்ளைகள் துஆச் செய்ய வேண்டுமென்பதை அறிகிறோம் ஆனால், நடைமுறையோ கூலிக்கு ஆள் பிடித்து பாத்திஹா என்ற பெயரில் பத்தி, சாம்பிராணி, கறி, சோறு என்று அமர்க்களப்படுத்துகிறார்கள்.

தர்மம் செய்தல்

எனது தாய் மரண வேளையில் இருந்தார்கள். அவர்கள் பேசியிருந்தால் தர்மம் செய்யும்படிச் சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்காக நான் தர்மம் செய்தால் அவர்களுக்கு பலன் தருமா? என்று ஒருவர் கேட்டார். ஆம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தர்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

எனது தந்தை சிறிது சொத்தை வஸிய்யத் எதுவும் செய்யாமல் விட்டு விட்டு இறந்துவிட்டர். அவருக்காக நான் அதை தர்மம் செய்தால் அவருக்கு (அல்லாஹ்) பகரமாக்குவானா? என்று ஒருவர் கேட்டார், அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆம் என்றார்கள். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்)

நோன்பு வைத்தல்

அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒருமாத நோன்பு வைப்பது தம்மீது கடமையாயிருக்க இறந்துவிட்டனர். நான் அதை அவர்களுக்காக நிறைவேற்றலாமா? என்று ஒருவர் கேட்டார். உனது தயாருக்கு கடன் இருந்தால் அதை அவர்களுக்காக நிறைவேற்றத் தானே செய்வாய்? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானல் நிறைவேற்றப்பட அதிக தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடன்(நோன்பு) ஆகும். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஹஜ் செய்தல்

என் தாய் ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார்கள், ஆனால் இறக்கும்வரை அதை நிறைவேற்றவில்லை. அவர்களுக்காக நான் ஹஜ் செய்யலாமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜுஹைனா என்ற கிளையைச் சேர்ந்த ஒரு பெண் கேட்டார் அதற்கு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீ அவர்களுக்காக ஹஜ்செய். எனவே இந்த(ஹஜ்) கடனையும் நிறைவேற்று. அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகக் தகுதி வாய்ந்தது என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி)

ஒரு மூமின் இறந்து விட்டால் அவரது பிள்ளைகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருக்காக துஆச் செய்வது, அவருக்காக தர்மம் செய்வது, ஹஜ், நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கலாம். அல்லாஹ் நம் அனைவரையும் நபி வழியில் நடக்க துணைபுரிவானாக ஆமின்!
 

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )