Feb 8, 2012

நடத்தை கெட்ட மனைவியுடன் வாழலாமா?


கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேறு ஒருவருடன் கள்ள உறவு வைத்தால் இதனால் அவ்விருவருக்கிடையே உள்ள திருமண உறவு முறிந்துவிடாது.
தவறு செய்தவர் தான் செய்த தவறுக்காக வருந்தி இனி இந்தத் தவறை செய்யமாட்டேன் எனக் கூறி மன்னிப்புக் கேட்கிறார். இதை ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் அவருடைய வாழ்க்கைத் துணைக்கு உரிமையுள்ளது. அவர் இதை ஏற்றுக் கொண்டால் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாகவே வாழலாம்.
அவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த குற்றத்தைச் செய்தவரை விட்டும் பிரிந்து விடலாம். ஆண் தவறு செய்திருந்தால் பெண் தனக்குரிய விவாகரத்து முறையின் படி (குலஃ) கணவனிடமிருந்து பிரிந்து கொள்ளலாம்.
பெண் தவறு செய்திருந்தால் அதை அவன் அம்பலப்படுத்துவதில் உறுதியாக இருந்தால் லிஆன் என்ற முறையில் பிரிந்து கொள்ளலாம்.
தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்.தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும்."அவனே பொய்யன்'' என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும்."அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்பது ஐந்தாவதாகும். (திருக்குர்ஆன் 24:63)

மனைவி நடத்தை கெட்டவள் எனக் குற்றம் சாட்டும் கணவனுக்கு தன்னைத் தவிர வேறு ஆதாரம் இல்லாவிட்டால் அவன் தான் சொல்வது உண்மையே என நான்கு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாவது தடவையாக நான் கூறுவது பொய்யாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என் மீது ஏற்பட்ட்டும் என்று அவன் கூற வேண்டும்.
இதைத் தொடர்ந்து அவனது மனைவி நான்கு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அதை மறுக்க வேண்டும். ஐந்தாவது தடவை நான் சொல்வது பொய்யாக இருந்தால் என் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்ட்டும் எனக் கூற வேண்டும்
இவ்வாறு இருவரும் கூறிய உடன் இருவருக்கும் இடையே இருந்த திருமண உறவு தானாக முறிந்து விடும். இதன் பின்னர் மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ அனுமதி இல்லை. மேலும் அவள் பெற்ற குழந்தை தன்னுடையது அல்ல என்று அவன் மறுத்தால் அந்தக் குழந்தை தாயுடன் சேர்க்கப்படும். அவனது குழந்தையாகக் கருதப்படாது. இதற்கான் ஆதாரங்கள் வருமாறு:
சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனைக் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப் பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர் களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அப்போது அல்லாஹ் அந்தக் கணவன் மனைவி தொடர் பாகக் குர்ஆனில் தான் கூறியுள்ள லிஆன்' எனும் சாப அழைப்புப் பிரமாணச் சட்டத்தை அருளினான்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதரிடம், உமது விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள். பிறகு அந்த (கணவன், மனைவி) இருவரும் லிஆன்' செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதர் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார்.
(அன்றி லிருந்து) அந்த நிகழ்ச்சியே லிஆன்' செய்யும் கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதற்கு முன்மாதிரியாகிவிட்டது. அப்பெண் கருவுற்றிருந்தாள். அவளுடைய கணவர் அக்கருவை (தனக்குரியது' என) ஏற்க மறுத்தார். (பின்னர் அவளுக்குப் பிறந்த) அவளுடைய மகன் அவளுடன் இணைத்தே (இன்னவளின் மகன்) என்று அழைக்கப்பட்டு வந்தான். பிறகு அவன் அவளிடமிருந்தும், அவள் அவனிடமிருந்தும் அல்லாஹ் ஏற்படுத்திய பங்கினைப் பெறுகின்ற வாரிசுரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. (புகாரி 4746)
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின்•தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் (உவைமிர்) தம் மனைவியின் மீது (விபசாரக்) குற்றம்சாட்டி அவளுடைய குழந்தையை (தன்னுடையதாக) ஏற்க மறுத்தார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவருக்கும் (சாப அழைப்புப் பிரமாணம்' செய்திடுமாறு) உத்தரவிட்டார்கள். அவர்களும் (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ள முறைப்படி (லிஆன்' எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். பிறகு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தை அப் பெண்ணிற்குரியது என்று தீர்ப்பளித்து, லிஆன்' செய்த (கணவன், மனைவி) இருவரையும் (மண பந்தத்திலிருந்து) பிரித்துவைத்தார்கள். (புகாரி 4748)
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டினால் (சட்டம் என்ன)? என்று கேட்டேன். அதற்கவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை (இதைப் போன்ற நிலையில்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரித்துவைத்தார்கள். பிறகு உங்களிருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா? என்றார்கள். உடனே அவர்கள் இருவருமே மறுத்தனர்.
பிறகு (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா? என்று கேட் டார்கள். அப்போதும் அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மூன்றாம் முறையாக அதைப் போன்றே) உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரித் திரும்புகிறவர் உண்டா? என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தார்கள். ஆகவே, அவர்கள் இருவரையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரித்துவைத்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸில் ளசயீத் பின் ஜுபைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்டன ஒரு விஷயத்தைத் தாங்கள் கூறவில்லை என்றே கருதுகிறேன் என்று என்னிடம் அம்ர் பின் தீனார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: (சாப அழைப்புப் பிரமாணம் செய்த) அந்த மனிதர், (மஹ்ராக நான் அளித்த) எனது பொருள் (என்ன ஆவது)?' என்று கேட்டார். அதற்கு அவரிடம், (உம்முடைய மனைவி மீது நீர் சுமத்திய குற்றச்சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டுள்ளீர்! (அதற்கு இந்த மஹ்ர் நிகராகிவிடும்.) நீர் பொய் சொல்லி யிருந்தால் (மனைவியை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அந்தச் செல்வம் உம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது' என்று கூறப்பட்டது. (புகாரி 5311)
நான் லிஆன் செய்த போது அங்கே இருந்தேன். இருவரும் பிரிந்து விட வேண்டும் என்பதும் இருவரும் ஒரு போதும் சேரக்கூடாது என்பதும் அப்போது முதல் சுன்னத்தாக ஆனது என்று ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (அபூதாவூத் 1918)
கணவன் அவளை அம்பலப்படுத்தாமல் அவளிடமிருந்து விலகி விட விரும்பினால் தலாக் கூறி பிரிந்து கொள்ளலாம். அல்லது அவன் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் முடிவு எடுத்தால் அதற்கான உரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்வரும் செய்தி இதைத் தெளிவுபடுத்துகின்றது.
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எனது மனைவி (தன்னைத்) தொடுபவரின் கையைத் தட்டிவிடுவதில்லை என்று கூறினார். அவளை ஒதுக்கிவைத்துவிடு என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனது மனம் அவளைப் பின்தொடர்ந்தே செல்லுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்றார். அப்படியானால் அவளை அனுபவித்துக்கொள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவுத் 1753)
source: onlinpj

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )