Jan 10, 2013

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு!


 هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ
 مُّبِينٍ   
    அவன்தான் எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (62:2)

உண்மையில் குர்ஆன் எழுதப்படிக்க தெரியாத அறியாமையிலும் வழிகேட்டிலும் மூழ்கி கிடந்த மக்களுக்காகத் தான் இறங்கியது.  இந்த  வசனப்படி  95% சஹாபாக்கள்  குர்ஆனை   நபி(ஸல் அவர்களின் விளக்கத்தின் துணையோடு  தெளிவாகப் புரிந்து  கொண்டார்கள். ஆனால் அதே சமயத்தில்  நாங்கள் தான் கற்றவர்கள், அரபி  இலக்கண  இலக்கிய  விற்பன்னர்கள் என்று  மார்தட்டிய  “தாருன் நத்வா” (அறிஞர்கள் சபை)  தலை சிறந்த அறிஞர்கள் என்று மக்களால் போற்றப்பட்டவர்களை வடிகட்டிய ஜாஹில்கள் என்றும், ஜாஹில்கள் என்று தூற்றப்பட்டவர்களை தலை சிறந்த அறிஞர்கள் என்றும் உலகம் சொல்லும் ஒரு மாபெரும் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்தி காட்டியது. உண்மையில் இது மாபெரும் அதிசயம்தான்.

ஆம்! நாங்கள் தான் கற்றவர்கள் அரபி இலக்கண இலக்கியம் அறிந்தவர்கள் என்று அகந்தையுடன் மார் தட்டியவர்கள் அன்று குர்ஆனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதே வேளையில் அரபி இலக்கணம் இலக்கியம் அறியாத பாமர மக்களாகிய அன்றைய அரபிகள் பயபக்தியுடையவர்களாகவும் (புலன்களுக்கு எட்டாத) மறைவானவற்றை  நம்பியவர்களாகவும் தொழுகையை அதனதன்  நேரத்தில்  தவறாமல் நிறை வேற்றக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். உண்மையில் குர்ஆனை ஓதி விளங்க முற்பட்டால் நிச்சயமாக குர்ஆனை சரியாக விளங்கிக் கொள்ள முடியும். இது அல்லாஹ் கொடுக்கும் உத்திரவாதமாகும்.

ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
    இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.(2:2)

الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُون
    (பயபக்தியுடைய) அவர்கள் (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைபிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள்.(2:3)

والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ
    (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; ன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.(2:4)

أُوْلَـئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
    இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர் வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். வசனம் (2:5)

குர்ஆனிலும், ஹதீஸிலும் பாடுபடும் முயற்சியும் அதற்கு மேல் அரபி இலக்கண இலக்கிய ஞானம் இருந்தால் அதை நாம் வரவேற்கிறோம். அதனை நாம் மறுக்கவில்லை. இன்னும் பாடுபடுபவர்களில் சிலருக்கு ஞானத்தை அல்லாஹ் அதிகமாகவும் கொடுத்துவிடலாம். இது அல்லாஹ் அவருக்குக் கொடுத்த சிறப்பு ஆகும்.

يُؤتِي الْحِكْمَةَ مَن يَشَاء وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيراً وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُوْلُواْ الأَلْبَابِ 
    தான் நாடியவர்களுக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு)ஞானம் எவருக்கு கொடுக்கப்படுகின்றதோ,  அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக  நிச்சயமாக  ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைத் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (2:269)

இந்த வசனப்படி இந்த சிறப்பைப் பெற்றவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக்கொண்டு அந்த ஞானத்தைக்கொண்டு மற்ற மக்களுக்கும் குர்ஆன், ஹதீஸை விளங்கவைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டுமே அல்லாது சமுதாயத்தை இரு பிரிவினர்களாக்கி நாங்கள்தான் மார்க்கத்தை போதிக்கும் உரிமை பெற்றவர்கள் நாங்கள் சொல்வதை  கண்ணை மூடிக்கொண்டு  ஆதாரங்களை கேட்காமல்  ஏற்று  நடக்க  வேண்டும் என்று சமுதாயத்தில் ஒருபோதும் முனையக்கூடாது. இதனால்தான்”தக்லீத்”எனும் கண்மூடிப்பின்பற்றலும் மதப்பிரிவுகளும் சமுதாயப் பிளவுகளும் வீழ்ச்சிகளும் ஏற்படுகின்றன.
اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (7:3)
இந்த வசனத்தில் இப்போது நாம் எங்களுக்கு குர்ஆன் தெரியாது ஹதீஸ் தெரியாது அவற்றை அறிந்து கொள்ள அரபியும் தெரியாது அதற்கு நேரமும் இல்லை. அந்த நாதாக்கள் எல்லாம் தங்கள் வாழ்நாள் முழுவதும் மார்க்கத்திற்காக அர்பணித்தவர்கள். பகல் இரவென்று பாராது பாடுபட்டவர்கள். குர்ஆனையும் ஹதீஸையும் கரைத்துக் குடித்தவர்கள், அரபி இலக்கண இலக்கியங்களில் தேர்ந்தவர்கள், பதினாறு கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள். குர்ஆனைப் பற்றியும், ஹதீஸைப் பற்றியும் அவர்களுக்கு தெரியாததையா நாங்கள் தெரிந்து கொள்ளப் போகிறோம். ஆகவே அவர்களை எங்கள் பாதுகாவலர்களாக்கி அவ்ர்களை எங்கள் இமாமாக ஆக்கி அவர்க்ளைப் பின்பற்றுகிறோம் என்று நாம் சொல்கிறோமே இதைத்தான் மிக வண்மையாக அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.
   நபி(ஸல்) அவர்களை பின்பற்றுகிறோம் என்றால் நாமாக பின்பற்றவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவர்களை பின்பற்றியே ஆக வேண்டுமென்று பல வசனங்களில் கட்டளையிட்டதை வைத்தே பின்பற்றுகிறோம். வேறு யாரையும் பின்பற்ற அல்லாஹ் உத்தரவிடவில்லை. அதனால் நபி (ஸல்) அவர்களைத்தவிர வேறு யாரையும் அது ஒருவராக இருந்தாலும், பலராக இருந்தாலும், நல்லவர்களாக இருந்தாலும் நாம் அவர்களை பாதுகாவலர்களாக்கி பின்பற்றவே கூடாது. அப்படி இருந்தும் நம்மில் வெகு சிலரே இந்த உண்மையைக் உணரக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُوْلَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُوْلَئِكَ هُمْ أُوْلُوا الْأَلْبَاب
    அவர்கள் சொல்லை – நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள்.அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.(39:18)

   விளங்கிச் செயல்படுவது கண்மூடிப்பின்பற்றல் அல்ல
   பிக்ஹூ நூல்களை தந்த இமாம்கள், ஹதீஸ் நூல்களை தந்த இமாம்கள் அதற்கு பின்னால் வந்த பலநூறு இமாம்கள் ஏன்? சாதாரண நபர் முதல் யார் சொல்லி இருந்தாலும், அல்லது எழுதி வைத்திருந்தாலும் அவை குர்ஆன், ஹதீஸ்படி  இருக்கிறதா? என்று  பார்த்து விளங்கி ஏற்று  நடப்பதை அல்லாஹ் அனுமதிக்கிறான். அதே போல் யாருடைய சொல்லாக இருந்தாலும் அது குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக இருந்தால் அதை புறக்கணித்தலே குர்ஆன், ஹதீஸ் வழி நடப்பதாக இருக்கும்.

اتَّخَذُواْ أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّن دُونِ اللّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُواْ إِلاَّ لِيَعْبُدُواْ إِلَـهًا وَاحِدًا لاَّ إِلَـهَ إِلاَّ هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ 
    அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.(9:31)

என்ற திரு வசனம் இறங்கியபோது கிறிஸ்த்தவராக இருந்து பின்னர் இஸ்லாத்தில் இணைந்த ‘அதீ இப்னு ஹாதம்’ (ரலி) என்ற நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்க வில்லையே! (கடவுள்களாக ஆக்கிவிட்டதாக இறைவன் கூறுகிறானே) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியவற்றை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியவற்றை ஹராம் என்றும் (கண்மூடித்தனமாக) நீங்களூம் கருதினீர்கள் அல்லவா? அதுதான் அவர்களை கடவுள்களாக கருதியதற்கு நிகரானது என்று விளக்கம் தந்தார்கள். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதீ)
இந்த நிகழ்ச்சியிலிருந்து எவரையும் கண்மூடித்தனமாக பின்பற்ற எவருக்கும் மார்க்கத்தில் அனுமதியில்லை. மார்க்க அறிஞர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதற்குறிய ஆதாரங்கள் அறிய முயற்சிக்காமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவது மிகப்பெரும் குற்றம் என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்கு தெளிவாக்குகின்றது.
அல்லாஹ் நம்  அனைவருக்கும்  இருளிலிருந்து  வெளிச்சத்திற்கு  வந்து  அவனது  நேர்வழியில்  நடக்க அருள் புரிவானாக! ஆமீன்!

K.M.H

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )