Nov 7, 2010

இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?

                                       அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதிர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள். (அல் குர்ஆன் 2:154)

            இதே கருத்து 3:169 வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.
      அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள்! இறந்தவர்கள் என எண்ணாதீர்கள்! என்று இந்த வசனங்கள் கூறுவதை முஸ்லிம்களில் சிலர் தவறாக புரிந்து வைத்துள்ளனர்.
          
      மகான்களும், நல்லடியார்களும் இறந்த பின்பும் உயிரோடு உள்ளனர். எனவே அவர்களை வழிபடலாம்; அவர்களை அழைக்கலாம்; பிராதிக்கலாம் என்பதற்கு இவ்வசனங்கள்  சான்றாக அமைந்துள்ளதாக அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். இது பல காரணங்களால் தவறான விளக்கமாகும்.

       இவ்வசனங்கள் நல்லாடியார்கள் மற்றும் மகான்களை கொண்டாடவோ, அவர்களுக்கு வழிபாடு நடத்துவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்ய ஒருவர் தயங்கக் கூடாது என்பதை வலியுறுத்தவே அருளப்பட்டன.

            இவ்வசனங்கள் அருளப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித் தோழர்களோ, அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை அழைக்கவோ, பிராத்திக்கவோ இல்லை என்பதை முதலில் விளங்கி கொள்ளவேண்டும்.

                 இவ்வசனங்களை கவனமாக ஆய்வு செய்தால் அவர்களின் விளக்கம் தவறு என்பதை அவர்களே அறியலாம்.
              
                  2:154 வசனத்தில் "அவர்கள் உயிருடன் உள்ளனர்" என்பதுடன் "எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள் " என்றும் கூறப்பட்டுள்ளது.

                அவர்கள் உயிருடன் இருப்பதும் நாம் உணர்ந்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தையே இது தரும்.

               3:169 வசனமும் அதைத் தொடர்ந்து வரும் நான்கு வசனங்களும் இதை இன்னும் தெளிவாகக் கூறுகின்றன.

            3:169 வசனம் " தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்" எனக் கூறுகின்றது. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனைப் பொறுத்தவரை அவர்கள் உயிருடன் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

               இவை அனைத்தையும் விட இவ்வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் அளித்த விளக்கம் தான் முக்கியமானது.
                
                 உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி? என்று நாங்கள் கேட்ட போது "அவர்களின் உயிர்கள் பச்சை பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார்கள்.
                                                                                       (நூல் : முஸ்லிம் 3500)

              நியாயத் தீர்ப்புக்குப் பிறகு தான் நல்லோர் சொர்க்கம் செல்வார்கள். எனவே தான் மனித வடிவில் இல்லாமல் பச்சை நிறப் பறவைகளாக சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

              அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்துக்களை வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாமா? அவரது மனைவி மற்றவரை மணந்து கொள்ளலாமா? என்று கேட்டால் செய்யலாம் என்று தான் மாற்றுக் கருத்துடையோர் பதிலளிப்பார்கள் . அவர்கள் நம்மைப் பொறுத்த வரை இறந்து விட்டார்கள் என்று இவர்களும் ஒப்புக் கொள்வதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

                    நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்றே ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிராத்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம் கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?

                  ஈஸா நபியவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர். (பார்க்க அல் குர்ஆன் 4:157-159, 5:75, 43:61)

               ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப் பிராத்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள், ஈஸா நபிக்குச் சமமாக இல்லாதவர்களிடம் பிராத்திப்பது எந்த வகையில் சரியானதாகும்?

                  அனைத்தையும் படித்துப் பரிபாலித்து  வேண்டும். உயிருடன் இருப்பதால் மட்டும் ஒருவரைப் பிரார்த்திக்க முடியாது.

                 அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காகப் போருக்குச் சென்று கொல்லப்பட்டார? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
                        
                    
              

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )