Jul 15, 2011

கியாமத் நாளின் மாபெரும் பத்து அடையாளங்கள்

          மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விசயங்களை குறிப்பிட்டார்கள்
  •   புகை மூட்டம்
  •   தஜ்ஜால்
  •   (அதிசய) பிராணி
  •   சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
  •   ஈசா (அலை) இறங்கி வருவது
  •   யஹ்சூஜ், மக்சூஜ்
  •   கிழக்கே ஒரு பூகம்பம்
  •   மேற்கே ஒரு பூகம்பம்
  •   அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
  •   இறுதியாக ஏமனில் இருந்து புறப்படும் தீ பிழம்பு மக்களை விரட்டி சென்று ஒன்று சேர்த்தல்
புகை மூட்டம் 

         இதில் முதலாவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அடையாளத்திற்கு அதிகமான விளக்கம் எதையும் அவர்கள் கூறவில்லை. ஆயினும் திருமறை குர்ஆனில் 44 -வது அத்தியாயத்தில் ஓரளவு இது பற்றி குறிப்பிடப்படுகிறது....................

          வானம் தெளிவான புகையை கொண்டு வரும் நாளை எதிர் பார்ப்பீராக! அது மக்களை மூடிக்கொள்ளும். இதுவே துன்புர்த்தும் வேதனை. 'எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக! நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள் (என்று கூறுவார்கள்) அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்? ) அவர்களிடம் தெளிவான தூதர் வந்துள்ளார். பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். 'பிறரால் கற்றுகொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்' என்றும் கூறினர். வேதனையை சிறிது நேரம் நாம் நீக்குவோம் . நீங்கள் பழைய நிலைக்கு திரும்புவீர்கள். மிகக் கடுமையான பிடியாக நாம் பிடிக்கும் நாளில் தண்டிப்போம். திருக் குரான் : 44-10,44-16

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்கள் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஹ்மினை இப்புகை ஜலதோசம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரை பிடிக்கும் பொது அவன் ஊத்தி போவான்.அவனது செவிப்புரை வழியாக புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்) பிராணி, மூன்றாவது தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: தப்ராணி)

தஜ்ஜால்:

       பத்து அடையாளங்களில் தஜ்ஜால் என்பவனது வருகை முக்கியமானதாகும்.

               நூஹ்(அலை) அவர்களுக்கு பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலை பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைபற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி  3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057)

தஜ்ஜாலின் அடையாளங்கள்:

          பெரும் பொய்யனாகிய ஒற்றைக் கண்ணனைப் பற்றி எந்த நபியும் தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக தஜ்ஜால் ஒரு கண் ஊனமுற்றவன். உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமுற்றவன் அல்லன். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 7131)

எழுத தெரிந்த, எழுத தெரியாத எல்லா முஹ்மின்களுக்கும் படிக்கும் விதமாக தஜ்ஜாலின் கண்களுக்கிடையே காஃபிர் என்று எழுத பட்டிருக்கும். என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 5223)

தஜ்ஜால் வாழும் நாட்கள் :

"தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும். ஏனைய நாட்கள் சாதாரண நாட்களை போன்றும் இருக்கும் என்று விடையளித்தார்கள். (நூல்: முஸ்லிம் 5228)

தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள் :
                 இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் சுற்றி வருவான் ஆயினும் சில இடங்களை அவனால் அடைய முடியாது என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

   அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களையும் அவன் அடைவான். மஸ்ஜிதுல் ஹராம், மதீனாவின் மஸ்ஜித், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு இடங்களை அவன் நெருங்க முடியாது என்பது நபிமொழி. (நூல் : அஹ்மத் 22571)

தஜ்ஜால் வெளிப்படும் இடம்:

                  தஜ்ஜால் சிரியாவுக்கும், இராக்குக்கும் இடையே வெளிப்பட்டு வலப்புறமும் இடப்புறமும் விரைந்து செல்வான். "அல்லாஹ்வின் அடியார்களே உறுதியாக நில்லுங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 5228)


ஈசா நபியின் வருகை:

      தஜ்ஜாலின் கொடுமை தலை விரித்தாடும் போது ஈசா நபியவர்கள் வானிலிருந்து இறங்கி வருவார்கள் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும். 

     தஜ்ஜால் இவ்வாறு ஆட்டம் போட்டு கொண்டிருக்கும் போது ஈசா நபியவர்கள் வருவார்கள் என்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

             இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான். அவர் குங்குமச் சாயம் தேய்க்கப்பட்ட இரண்டு ஆடைகளை அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ்(திமிஷ்க்)நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள்.  அவர்கள் தலையை குனிந்தால் நீர் சொட்டும்! அவர் தலையை நிமிர்ந்தால் முத்துகளைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் மூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவரகளின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் தஜ்ஜாலை தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகே உள்ள) லுத் என்ற கிராமத்தின் வாசலில் அவனை கொல்வார்கள்.  (நூல் : முஸ்லிம் 5228)

                  தஜ்ஜாலை கொன்ற பின் தாஜ்ஜளிடமிருந்த தப்பித்த கூட்டத்தினர் ஈசா நபியிடம் வருவார்கள். அவர்களின் முகத்தை தடவி கொடுப்பார்கள். சொர்க்கத்தில் அவர்களுக்கு கிடைக்கும்  பதவிகளை பற்றி அவர்களுக்கு எடுத்து கூறுவார்கள். (நூல்: முஸ்லிம் 5228)

              இந்த நிலையில் "யாராலும் வெல்ல முடியாத அடியாளர்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவர்களை தூர் மழையின் பால் அழைத்து செல்வீராக" என்று ஈசா நபிக்கு அல்லாஹ் செய்தி அனுப்புவான். (நூல் : முஸ்லிம் 5228)

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை:

                  நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த பத்து அடையாளங்களுள், யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இந்த கூட்டத்தினர இனிமேல்தான் பிறந்து வருவார்கள் என்றில்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகிறார்கள்.

         "முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்கப்பால் எந்த பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தை அவர் கண்டார். துல்கர்னையே! யஃஜுஜ் மஃஜுஜ் எனும் கூட்டத்தினர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?"என்று அவர்கள் (சைகை மூலம் )கேட்டனர். என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. 'வலிமையால் எனக்கு உதவுங்கள் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நான் அமைக்கிறேன்' என்றார். '(தனது பணியாளர்களிடம் )என்னிடம் இரும்பு பாலங்களை கொண்டு வாருங்கள்' என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது ஊதுங்கள்! என்று கூறி அதை தீயாக ஆக்கினார். 'என்னிடம் செம்பை கொண்டு வாருங்கள் அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்' என்றார். அதில் மேலேருவதற்கும் துவாரம் போடவும் அவர்களால் இயலாது. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார். அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். சூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்றாக்குவோம்.  (அல் குர்ஆன் 18:94-99)

            முன்பே அந்த கூட்டத்தினர் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்பு பாலங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதை குடைந்து அவர்களால் வரவும் முடியாது அதை தாண்டியும் அவர்களால் வரமுடியாது.
                  யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்த தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் அளவிற்கு எண்ணிக்கையில் பெருமளவு இருப்பார்கள் என்பதை இவ்வசனத்தின் மூலம் நாம் அறிய முடிகிறது.

மூன்று பூகம்பங்கள்:
                               யுக முடிவு நாளின் நெருக்கத்தில் மிகப்பெரும் நிலச்சரிவுகளும், பூகம்பங்களும் ஏற்படும். மனிதர்கள் உயிருடன் புதையுண்டு போவார்கள்

                          மதீனாவின் கிழக்கே ஒரு பூகம்பம், மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்ப்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காணும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் )

பெரு நெருப்பு:

                   எமன் நாட்டில் மிகப்பெரும் ஏற்பட்டு அந்நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவி மொத்த உலகையும் சூழ்ந்து கொள்ளும். யாராலும் அணைக்க முடியாத அந்நெருப்பு பரவ ஆரம்பித்ததும் மக்கள் தத்தமது ஊரை காலி செய்து விட்டு ஓட ஆரம்பிப்பார்கள். நெருப்பும் அவர்களை விரட்டி செல்லும். முடிவில் எந்த இடத்தில் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுவர்களோ அந்த இடத்தை அடைவார்கள்.


                எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களைத் மஹ்சரின் பால் விரட்டி செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் )




1 comments:

  1. assalamu alaikum ungal seithikal ellam patithu therinthu konten ithai makkalitam parappuvathe en nokkam nalla vitayangala namum solluvom allah nam anaivarukkum uthavi seivanaga ennayum unkal pakuthiyil oru urupinaraka serthu kolla mutiyuma ?

    ReplyDelete

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )