Mar 15, 2012

விலக்கப்பட்ட உணவுகள் - IV


கடல் வாழ் உயிரினங்கள்

உயிர்ப்பிராணிகளில் ஒருவகை கடல் வாழ் உயிரினங்கள். கடல் வாழ் உயிரினங்களில் எவற்றை உண்ணக் கூடாது என்றால் அப்படி எதுவுமே இல்லை என்பது தான் இதற்கான விடையாகும். கடல் வாழ் உயிரினங்களில் விலக்கப்பட்ட ஒன்று கூட இல்லை. கடல் வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான்.

சில மார்க்க அறிஞர்கள் நண்டு, சுறா, திமிங்கலம் ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று கூறுவதை யாரும் நம்பத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறு கூறுவதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை. அவர்களாகவே கற்பனை செய்து தான் கூறுகிறார்கள்.
கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் 5:96)
பசுமையான மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.
(அல்குர்ஆன் 16:14)

கடல் நீரில் செத்தவைகளும் கூட ஹலால் என்ற ஹதீஸை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.

கடல் வாழ் உயிரினங்களில் செத்தவை உள்ளிட்ட அனைத்துமே ஹலால் என்பதற்கு இவை சான்றுகளாகவுள்ளன.

கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டது இருந்திருந்தால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் கூறவேண்டும். வேறு எவருக்கும் ஹராமாக்கும் அதிகாரம் கிடையாது.

அல்லாஹ்வும் அவனது தூதரும் கடல் வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் ஹராம் என அறிவிக்கவில்லை.

பறவையினங்கள்

இரண்டாவது முக்கிய உயிரினம் பறவையினமாகும்.

பறவையினத்தின் பெயர்களைப் பட்டியல் போட்டு இவை ஹலால், இவை ஹராம் என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்படவில்லை.

ஆயினும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பறவையினத்தில் எவை ஹராம் என்பதற்கு பொதுவான அளவு கோலைத் தந்துள்ளனர்.

'
மிக்லப்' உடைய ஒவ்வொரு பறவையையும் உண்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: முஸ்லிம்
'மிக்லப்' என்ற சொல்லுக்கு நகம் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். பாய்ந்து பிடித்து வேட்டையாடுவதற்குரிய நகங்கள் என்பது தான் சரியான பொருளாகும்.

ஏனைய உயிரினங்களை வேட்டையாடப் பயன்படும் நகங்கள் எந்தப் பறவைகளுக்கு உள்ளனவோ அவை உண்ணத் தடை செய்யப்பட்டவையாகும்.

கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பறவைகள் ஏனைய உயிரினங்களைத் தமது நகங்களால் வேட்டையாடுகின்றன. இது போன்ற பறவையினங்களை நாம் தவிரித்துக் கொள்ள வேண்டும்.

கோழி போன்ற பறவையினங்களுக்கு கூரிய நகம் இருந்தாலும் அவை செத்தவற்றை உண்ணும் போது தான் துணைக்கு நகத்தைப் பயன்படுத்தும். உயிரினத்தை (புழு பூச்சிகளை) வேட்டையாட தனது வாயையே பயன்படுத்தும்.

எனவே ஏனைய உயிரினங்களை வேட்டையாட நகங்களைப் பயன்படுத்தும் பறவைகள் தவிர மற்ற அனைத்துப் பறவைகளும் உண்ண அனுமதிக்கப்பட்டவையாகும்.

பெயர் தெரியாத பறவை நமக்குக் கிடைத்தால் அது வேட்டையாடுகிறதா? அதற்கு நகங்களைப் பயன்படுத்துகிறதா? என்று கவனித்து அப்பறவை பற்றி முடிவுக்கு வந்துவிடலாம். எவரிடமும் கேட்கத் தேவையில்லை.

விலங்கினங்கள்

விலங்கினங்களைப் பொருத்த வரை பன்றி பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரி 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

புகாரி 4215வது ஹதீஸில் வீட்டுக் கழுதை ஹராம் எனவும் குதிரை ஹலால் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பொதுவான அளவுகோலை நம் முன்னே வைத்துள்ளனர்.

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நயாகம்(ஸல்) தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸஃலமா(ரலி)
நூல்: புகாரி 5781, 5530.
மேற்பகுதியில் உள்ள பல் வரிசையின் முன் பற்களில் நான்கு பற்களுக்குப் பின் உள்ள பல் கோரைப் பல் எனப்படும்.

கோரைப் பல் என்பது மற்ற பற்கைளை விட நீளமாக இருக்கும். மனிதனுக்குக் கூட மற்ற விலங்கினம் அளவு இல்லா விட்டாலும் கோரைப் பல் இருக்கிறது. மேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும் இடப்பக்கம் ஒரு பல்லும் மற்ற பற்களை விட நீளம் அதிகமாக இருக்கும்.

இப்படி கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அதை நாம் உண்ணக் கூடாது. ஆடு, மாடு போன்றவற்றின் பற்கள் அனைத்தும் சமமான உயரம் கொண்டதாக அமைந்திருக்கும். பூனை, நாய், சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு இரண்டு பற்கள் மட்டும் மற்ற பற்கைளை விட மிகவும் நீளமாக இருக்கும்.

இந்த அளவுகோலை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும்கழுதையைப் பொருத்தவரை அதன் பற்கள் வரிசையாக இருந்தாலும் இந்த அளவு கோலில் அவை அடங்காவிட்டாலும் அதைக் குறிப்பிட்டு ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு இந்த அளவு கோலைப் பொருத்தக் கூடாது.

பல துறைகளிலும் விற்பன்னராக இருந்த அபூ அலி  இப்னு ஸீனா (அவிசென்னா) அவர்கள் விலங்கினங்களை ஆய்வு செய்து ஒரு தகவலைத் தருகிறார். கொம்பு உள்ள எந்த உயிரினத்துக்கும் கோரைப் பல் இருக்காது என்பது அவரது ஆய்வு.

எனவே எந்த விலங்குக்காவது கொம்பு இருந்தால் அதை நாம் உண்ணலாம். எவற்றுக்கு கொம்பு இல்லையோ அவற்றுக்கு மட்டும் கோரைப் பல் உள்ளதா என்று ஆய்வு செய்த பின் உண்ணலாம்.

புழு, பூச்சியினங்கள்

புழு, பூச்சியினங்களைத் தடை செய்யும் விதமாக எந்த ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை. எந்த ஒரு ஹதீஸும் இல்லை.

மாறாக பூச்சியினத்தைச் சேர்ந்த வெட்டுக்கிளியை நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில் அவர்கள் முன்னிலையில் சாப்பிட்டுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

நாங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து வெட்டுக்கிளியைச் சாப்பிட்டவர்களாக ஆறு ஏழு யுத்தங்கள் செய்துள்ளோம்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபூ அல்பா(ரலி)
நூல்: புகாரி 5495

போரில் தானே சாப்பிட்டார்கள்! சாதாரண நேரத்தில் சாப்பிடவில்லையே எனச் சிலர் கேட்கின்றனர். அவ்வாறு கேட்பவர்கள் சாதாரண நேரத்தில் இவை தடை செய்யப்பட்டவை என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.

கேடு விளைவிப்பவை

கடல் வாழ் பிராணிகளிலோ, புழு பூச்சியினத்திலோ எத்தனையோ விஷ ஜந்துக்கள் உள்ளன. அவற்றைச் சாப்பிட்டு விட்டு மனிதன் சாக வேண்டுமா என்று சிலர் நினைக்கலாம்.

உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்.
(அல்குர்ஆன் 2:195)

உங்களை நீங்கள் சாகடித்துக் கொள்ளாதீர்கள்.
(அல்குர்ஆன் 4:29)

மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் என்பது நிரூபணமானால் அவற்றை உண்ணக் கூடாது. இது உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும் தானியத்துக்கும் ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும்.

ஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை உண்பது ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பாம்பு, பல்லி, கடல் வாழ் விஷ ஜந்துக்கள் ஆகியவை இந்த அளவு கோலுக்குள் அடங்கும்.

உயிரினங்களில் விலக்கப்பட்டவை இவை மட்டுமே. இவை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் மனிதர்கள் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவையாகும்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவைகளில் சில நமக்கு அருவருப்பாக இருக்கலாம். அப்படி இருந்தால் அதைத் தவிர்த்துக் கொள்ளலாம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உடும்புக் கறியை விரும்பமாட்டார்கள். ஆனாலும் அவர்கள் முன்னே மற்றவர்கள் அதைச் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை.

(
பார்க்க புகாரி 2575, 5391, 5400, 5402, 5536, 5537, 7267)

இந்த நபிவழியை அடிப்படையாகக் கொண்டு நமக்கு ஒரு உணவு பிடிக்கவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு உண்ண அனுமதியைப் பறித்து விடக்கூடாது.

அனுமதிக்கப்பட்டதை மட்டும் உண்டு, தடை செய்யப்பட்டவைகளை விட்டும் விலகிய நன் மக்களாக இறைவன் நம்மை ஆக்கியருள்வானாக!

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )